கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என். எஸ்.எஸ் -1எப் செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி 32 மூலம் இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. கடல் ஆராய்ச்சிக்கு பிரத்யேகமாக 7 செயற்கைக்கோள்களை ஏவுவதற்குத் திட்டமிட்டு, இதுவரை 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இது 6-வது செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எப், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி32 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

இந்த ராக்கெட் 320 டன் எடையும், 44.4 மீட்டர் நீளமும் கொண்டது. செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற் கான 54 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 

இந்தியாவிலே உருவாக்கப் பட்ட 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எப் செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலைநிறுத்தப்படும். 

இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல், செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் இடத்தில் இருந்து ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றளவு வரையிலான கடல்சார் தகவல்களைத் துல்லியமாகத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைச் சீற்றம் கண்டறிதல், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார்ந்த ஆய்வுகளுக்கு இந்த செயற்கைக் கோள் மிகவும் உதவிகரமாக அமையும். 

இந்தச் செயற்கைக் கோள் சிறப்பாகச் செயல்பட்டு தகவல்களை அனுப்பத் தொடங்கும் போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜிபிஎஸ் வசதி கொண்ட நாடு என்ற பெருமையை எட்டும்.

இந்தச் செயற்கைக்கோள் செலுத்தலில் பங்காற்றிய திட்ட இயக்குநர் ஜெயக்குமார் கூறும்போது, “அனைவரது பங்களிப்புக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள். இந்த செயற்கைக் கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்” என்றார்.