Saturday 5 March 2016

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து
சென்னை: 'சென்னையை, கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என, சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் அண்ணா பல்கலையின் புவி அமைப்பியல் துறை இணைந்து, சென்னையில் பெய்த பெருமழை குறித்த, விஞ்ஞானிகளின் இரண்டு நாட்கள் கருத்தரங்கை, அண்ணா பல்கலையில் நடத்தின.

கருத்தரங்கில், விஞ்ஞானிகள் பேசியதாவது:'எல் - நினோ' எனப்படும், பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால், ஒரு குறிப்பிட்ட பகுதியில், எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்யும்; புவி வெப்பமயமாதலால் வறட்சியும் நிலவும்.சென்னையில் பெய்த பெருமழைக்கு, எல் - நினோ உட்பட, பல காரணங்கள் உள்ளன. வங்கக் கடலின் மேற்கில், சென்னையை ஒட்டியுள்ள கடலோரம் மற்றும் தரைப்பகுதி அதிக வெப்பமயமாகிறது; இதுவும், அதிக மழை பெய்ய காரணம்.சமீபத்தில் பெய்த பெருமழை போன்று வரும் காலங்களிலும், சென்னைக்கு மழை உண்டு; அது, எப்போது என கணிக்க முடியாது. எனவே, முன்னேற்பாடு அவசியம். தற்போதைய நிலையில், தமிழகத்தில் சராசரி மழை அளவு குறைந்துள்ளது; தென் மேற்கு பருவ மழையின் அளவு குறைந்து, வட கிழக்கு பருவ மழையின் அளவு அதிகரித்துள்ளது. நீரை சேமிக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

விஞ்ஞானிகள் குழு தேவை:


டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் ராஜாமணி பேசியதாவது: சென்னையில், 2015 நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட பெரு மழை, எதிர்பாராத சம்பவமல்ல. வானிலை ஆய்வு மையத்தினர் தெளிவாக முன் அறிவிப்பு விடுத்தனர்; ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நம் அரசுகள் நகர்ப்புறத்தை கட்டமைப்பதில், போதிய கவனம் செலுத்தவில்லை. அனைத்து விவசாய நிலங்களும் கட்டடங்களாகி விட்டன. குளம், ஏரி போன்ற நீராதாரங்களை பாதுகாக்கவில்லை. நீரை சேமிக்க வழியின்றி, நகருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து, கடலில் சென்று கலந்து விட்டது. எதிர்காலத்தில், இந்த பிரச்னையை சமாளிக்க சுதந்திரமான விஞ்ஞானிகள் குழுவை, அரசு துறைகளுக்கு உதவ அமைக்க வேண்டும். அதில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், பேராசிரியர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் இயற்கை பேரிடர் வரும் முன், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வறட்சி அபாயம் :


சமீபத்திய பெருமழையில், அதிக அளவுக்கு நீர் வீணானதால், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு தற்போதே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவன்,
முன்னாள் துணை பொது இயக்குனர் - இந்திய வானிலை ஆய்வு மையம்